அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேவி கோட்டம், தேக்கம்பட்டி - 641305, கோயம்புத்தூர் .
Arulmigu Vanabadrakaliamman Temple, Thekkampatti - 641305, Coimbatore District [TM009758]
×
Temple History
தல வரலாறு
தலவரலாறு
தலவரலாறு : மேற்கு தொடர்ச்சி மலைச் சாரலின் மலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் அன்னை வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், மேட்டுப்பாளையத்திலிருந்து தேக்கம்பட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நெல்லித்துறை எனும் பகுதியில் உள்ளது. இத்திருக்கோயில் அறங்காவலராக மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த தாசநாயக்கர் என்பவர் இருந்து வந்தார். பின்னர் அவரது மகன் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். அதன் பின்பு அவர் மகன் கோவிந்தராஜ் என்பவர் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். தற்போது ரங்கசாமி நாயக்கரின் மகன் . வசந்தா 24.2.2006 முதல் பரம்பரை
சரித்திர காலத்தில் நெல்லூர்...தலவரலாறு
தலவரலாறு : மேற்கு தொடர்ச்சி மலைச் சாரலின் மலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் அன்னை வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், மேட்டுப்பாளையத்திலிருந்து தேக்கம்பட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நெல்லித்துறை எனும் பகுதியில் உள்ளது. இத்திருக்கோயில் அறங்காவலராக மேட்டுப்பாளையம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த தாசநாயக்கர் என்பவர் இருந்து வந்தார். பின்னர் அவரது மகன் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். அதன் பின்பு அவர் மகன் கோவிந்தராஜ் என்பவர் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். தற்போது ரங்கசாமி நாயக்கரின் மகன் . வசந்தா 24.2.2006 முதல் பரம்பரை
சரித்திர காலத்தில் நெல்லூர் பட்டணம் என்னும் பகுதியை ஆரவல்லி, சூரவல்லி, வீரவள்ளி ஆகியோரின் உடன் பிறந்தவர்களின் எழுவர் ஆட்சி செய்தனர். மந்திர வலிமையிலும் சூனிய வித்தைகளிலும் வல்லவர்களாய் இருந்த அந்தப் பெண்களை வெல்ல முடியாமல் பல மன்னர்கள் வீழ்ந்தனர். அக்காலத்தில் வடபுலத்தில் குருகுல மன்னவர்களான துரியோதனாதியரும், பாண்டவர்களும் தத்தம் நாடுகளை அரசாண்டு வந்தனர்.
சூது பொருந்திப் பாரதப் போர் மூள்வதற்கு முந்தைய காலம் அது. ஒரு நாள் ஐவரும் மற்றவர்களும் கொலு மண்டபத்திலிருந்த சமயம், கிருஷ்ண பகவான் வந்து, ஆரவல்லி முதலான பெண்களின் ஆட்சியையும் அவர்களின் வல்லமையையும் தீய நெறிகளையும் எடுத்துக் கூறி அவர்கள்மீது பஞ்ச பாண்டவர்களைப் படையெடுத்துச் சென்று வெற்றி கொள்ளுமாறு கூறினார். அப்பொழுது பீமன் தான் சென்று வெற்றிகொண்டு வருவதாகச் சொல்லி, அனைவரிடமும் விடைபெற்றுப் போருக்குப் புறப்பட்டான். வனமாய் வனங்கடந்து நெல்லூர் பட்டணத்தை நோக்கி பீமன் வரும் செய்தியை நாரதர் மூலம் அறிந்த ஆரவல்லிப் பெண்கள் மந்திரத்தாலும், சூனியத்தாலும் பீமனை எதிர்த்தார்கள். மந்திரத்தால் கரடிகளையும், வேங்கைகளையும் பீமன் மீது ஏவிவிட, அவற்றை பீமன் விரட்டியடித்தான். சூனியங்களையும் தவிடு பொடியாக்கினான்.
அதன் பின் நடந்த சூது விளையாட்டுக்களில் பீமன் தோற்று ஆரவல்லியிடம் சிறைப்பட்டான். இதை அறிந்த கிருஷ்ணன் தம் மாயத்தால் சிறையிலிருந்து பீமனை விடுவித்தார். பீமன், தனது அண்ணன் தருமன் முதலானோரிடம் நடந்ததைச் சொன்னான். பீமன் தப்பி ஓடிவிட்டதை அறிந்த ஆரவல்லி பயந்து ஓடி விட்ட நீயும் ஓர் ஆண்பிள்ளையா? என்று நகைத்து ஓலையொன்று அனுப்பி வைத்தாள். இதைக் கண்டு ஐவர்களும் மற்றவர்களும் வெகுண்டெழுந்தனர். பஞ்சபாண்டவர்களின் தங்கையாகிய சங்கவதியின் குமாரன் அல்லிமுத்து தான் ஆரவல்லிப் பெண்களை வெற்றி கொள்ளத் தகுதியானவன் என்று முடிவு செய்து சங்கவதியிடம் வந்து விபரங்களைச் சொல்லி அல்லிமுத்துவை அழைத்து வந்தனர். ஐவரும் மற்றவர்களும் ஆரவல்லிப் பெண்களின் வல்லபங்களையும், வித்தை இருப்புகளையும், அல்லிமுத்துக்கு விளக்கமாக எடுத்துக் கூறி, வீரனே புறப்படு, ஆரவல்லிப் பெண்களை வெற்றி கொண்டு வருவாயாக என்று வாழ்த்தி அனுப்பினர். அணிகலன்களால் தன்னை அணி செய்து பலவகைப் படைக்கலன்களை ஏந்தி புரவி மீதேறித் தாவிப்புறப்பட்டான் அல்லிமுத்து.
நெடிய பயணத்தின் பின்பு வனமிடைக் கோயில் கொண்டிருக்கும் வெற்றி தரும் கொற்றவையாம் அன்னை பத்திரகாளியின் திருமன் வந்து நின்றான் அல்லிமுத்து. ஆரவல்லிப் பெண்களை வென்று சிறை பிடிக்க வரம் கேட்க அம்பிகை வெண்ணீறும் சக்திவாளும் கொடுத்து அருள்பாலித்து அனுப்பினாள். நெல்லூர் பட்டணத்தின் எல்லையை வந்தடைந்த அல்லிமுத்துவைச் சூனியங்கள் வந்து எதிர்த்தன. தேவியின் திருநீற்று வலிமையால் சூனியங்கள் எரிந்து விழுந்தன. நெல்லூர் பட்டணத்து ஆரவல்லிப் பெண்களை ஒழிக்க ஆணழகன் அல்லிமுத்து வருகிறான் என்று நாரதர் கூறக் கேட்ட ஆரவல்லிப் பெண்கள் வியப்புற்று மந்திரத்தை உறுவேற்றினர். சூனியங்கள் கரடிகளாகவும், வேங்கைகளாகவும், பெருவலி கொண்ட பூதங்களாகவும் உருவெடுத்து அல்லிமுத்துவை வந்து தாக்கின. அவற்றையெல்லாம் அம்பிகையின் திருநீற்று மகிமையால் தவிடு பொடியாக்கினான் அல்லிமுத்து. அதைக்கண்ட ஆரவல்லிப் பெண்கள் வியப்பும் வேதனையும், பயமும் அடைந்தார்கள். அல்லிமுத்துவை மாற்று வழியொன்றில் சிக்கவைக்க எண்ணி அவனை அணுகி வண்ணமுடி வேந்தே மெச்சினேன் உம்மை. எனதருமை மகள் பல்வரிசையை உமக்கு மணமுடித்து தருகிறோம். அவளை மாலையிட்டுச் செல்க என ஆரவல்லி உரைத்துத் தாங்கள் செய்த குற்றங்களைப் பொறுத்தருள்க என வேண்டி நின்றாள். அதற்கு அல்லி முத்துவும் சம்மதித்தான். பாண்டவர் ஐவரிடமும், மற்றவரிடமும் சென்று ஊரறியச் சொல்லி உமது மகளை மணம் முடிப்பேன் என்று கூறி பல்வரிசையுடன் புறப்பட்டான். செல்லும் வழியில் மங்கையின் மயக்கத்தால் தேவியின் திருநீற்றை மறந்துவிட்ட அல்லிமுத்துவுக்கு மயக்கமும் தாகமும் ஏற்பட்டது. அல்லிமுத்துவைக் காப்பாற்றுவதற்காகப் பல்வரிசை தன் தாய் ஆரவல்லி கொடுத்தனுப்பிய எலுமிச்சங்கனியின் சாறு பிழிந்து அல்லிமுத்துவுக்குக் கொடுத்தாள். ஆனால் அந்தக்கனியில் ஆரவல்லி சூது நிறைந்த மந்திரத்தை ஏற்றி வைத்துள்ளாள் என்பதைக் கள்ளங்கபடமற்ற அந்தப் பேதை பெண் அறியவில்லை. கனியின் சாற்றைப் பருகிய கட்டழகு வீரன் அவ்விடத்திலேயே உயிர் துறந்தான். அதைக்கண்ட பல்வரிசை அதிர்ச்சியுற்றுப் புலம்பி நின்றாள்.
அல்லிமுத்துவுக்கு நேர்ந்த கதியைக் குதிரையின் வாயிலாக அறிந்த பஞ்ச பாண்டவர்கள் வெகுண்டெழுந்தனர். நெல்லூர் பட்டணத்தை நோக்கிப் படையுடன் விரைந்தனர். செய்தியறிந்த அபிமன்னன் (அபிமன்யு) மிக வருந்தி, அல்லிமுத்துவின் உயிரைத் தேடி வானுலகுக்குச் சென்றான். அங்கு இந்திரனின் உதவியால் அல்லிமுத்துவின் உயிரைக் கண்டு பிடித்து அதை ஒரு குமிழில் அடைத்து எடுத்துக் கொண்டு நேராக அல்லிமுத்துவின் சடலம் இருந்த இடத்திற்கு வந்தான். அபிமன்னன் கொண்டு வந்த உயிர், சடலத்தில் புக, அல்லிமுத்து உயிர் பெற்று எழுந்தான். பின்னர் நடந்ததை அல்லிமுத்து சொல்லக் கேட்ட அபிமன்னன் சிங்கம் போல் வெகுண்டெழுந்தான். அது கண்டு மண்ணும் விண்ணும் நடுங்கியது. அனைவரும் ஆரவல்லி பட்டணத்தை நோக்கிச் சென்றனர். ஆரவல்லி பட்டணத்தின் அருகில் வந்தவுடன் அல்லி அரசன் தேவி பத்ரகாளியை வேண்டி கொழுமுகத்தை விட்டுக் கொற்றவையே வாருமம்மா நாயகியே வந்து நின்று உன் பூதப்படையை அனுப்பி வைக்க வேண்டுமம்மா என்று வேண்டினான். தேவியின் அருள் அவர்களுக்குக் கிடைத்தது.
ஆரவல்லி பட்டணத்தை சிதற அடித்தார்கள். சூனியங்களையும், மந்திரங்களையும் கதறி ஓடச் செய்தனர். பில்லி சூனியங்கள் உருவேற்று மந்திரங்கள் அனைத்தையும் பறக்க பறக்க அடித்தனர். ஆரவல்லிப் பெண்கள் எழுவரில் ஒருத்தி தப்பித்து விட அறுவர் சிறைபட்டனர். நல்லவை நலிந்து அல்லவை இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கும் போதெல்லாம் கனன்றெழுந்து கடிதில் வந்து அறம் மீளச் செய்து அவனியைக் காத்திடும் கருணையுள்ளம் கொண்ட தேவியின் சன்னதிக்கு வந்து அவள் திருவடி தொழுது வாழ்த்தி வணங்கி விட்டு அனைவரும் தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றனர். பல்வரிசைக்கு வாலம்மா எனப் பெயர் மாற்றி அவளுக்கும் அலலிமுத்துவுக்கும் திருமணம் செய்வித்தனர்.
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலுக்கு மேற்கே உள்ள பவானி ஆற்றின் அருகிலேயே ஆரவல்லிப் பட்டணமாகிய நெல்லூர் பட்டணம் இருந்தது எனவும், இவ்வட்டாரத்தில் நெல்லித்துறை, நெல்லிமலை, நெல்லூர்காடு,பாஞ்சாலி காடு என்ற பெயர் கொண்ட ஊர்கள் வழங்கி வருவதால் ஆரவல்லி கதை நிகழ்ந்த இடம் இப்பகுதி தான் என நம்பப்படுகிறது.